செங்கம், ஜூன் 21: செங்கம் அருகே நேற்று காலை வேனில் கடத்தி வந்த ₹3 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலையில் இருந்து வேனில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வன அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள வனவர் ஜனாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஜவ்வாதுமலை அடிவாரம் பரமனந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தினார். வன அதிகாரியை பார்த்ததும் வேனில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.இதையடுத்து, வேனில் சோதனை செய்தபோது ஜவ்வாதுமலையில் இருந்து செம்மரம் வெட்டி கடத்தியது தெரியவந்தது. பின்னர், செம்மரக்கட்டைகளை, வேனை பறிமுதல் செய்து செங்கம் வன அலுவலகத்தில் ஒப்படைத்தார்.