வருஷநாடு, ஜூன் 19: மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மேகமலை கண்டமனூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணித்து வருகின்றனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் மூன்று வனச்சரகங்கள் உள்ளன. வருசநாடு, மேகமலை, கண்டமனூர் என பிரிக்கப்பட்டு மூன்று வனச்சரகத்திற்கும் தனித்தனி அதிகாரிகள் மூலம் வனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக விலங்குகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் தனியார் தோட்டங்களில் இருந்து தண்ணீர் எடுத்வரும் நிலை வாடிக்கையாக உள்ளது. இதை போக்குவதற்கு வனத்துறை அதிகாரிகள் தங்களுடைய சொந்த செலவில் தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளை பாதுகாத்து வருகின்றனர்.குறிப்பாக மேகமலை வனப்பகுதியில் சோனைமுத்து வனவர் தலைமையிலும், கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலும், வருசநாடு வனச்சரகர் இக்பால் தலைமையிலும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். மேலும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்கள் மூலம் தனியார் தோட்டங்களில் இருந்து தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வனப்பகுதிகளில் ஆங்காங்கே நீர் தொட்டிகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.