மயிலாடுதுறை, ஜூன் 19: நாகை, திருவாரூர் மாவட்டங்களிலேயே கூட்டுறவு சர்க்கரை ஆலை மயிலாடுதுறையில் உள்ள தலைஞாயிறு நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று மட்டுமே. 1987ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இந்த ஆலை 1250 டன் அரவை திறனுடன் செயலாற்றி வந்தது.இந்தியாவிலேயே கரும்பு விவசாயிகளுக்கு போனஸ் அளித்த ஒரே சர்க்கரை ஆலையாக திகழ்ந்தது இந்த ஆலைதான். காலப்போக்கில் நலிவடைந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்த வண்ணம் இருந்தனர். 2015-16 அரவைப்பருவம் 2015 டிசம்பரில் துவங்க வேண்டியது, 2016 ஏப்ரல் மாதம் அரவை துவங்கியது. ஜூலை வரை அரவை நடைபெற்று முடிந்தது. 2016-17, 2017-18, 2018-19 வரை ஆலை அரவை இல்லாமலும் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி நிலுவைத் தொகையும் வழங்கவில்லை. இதனால் பல கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பு விவசாயத்தை தவிர்த்துவிட்டனர். தற்பொழுது இந்த ஆலைக்காக கரும்பு பயிரிடும் அளவு 2000 ஏக்கர் மட்டுமே மிச்சம் உள்ளது. பயிரிடும் கரும்பை மற்ற ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.