கரூர், ஜூன் 19: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நல கல்லூரி மாணவர் விடுதி 1, கல்லூரி மாணவியர் விடுதி 1, பள்ளி மாணவர் விடுதிகள் 10, பள்ளி மாணவியர் விடுதிகள் 7 என மொத்தம் 19 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகின்றன.10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசமாக 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலுவோருக்கு சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கிகள் வழங்கப்படுகின்றன.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கிமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.