சேலம், ஜூன் 18: சேலம் குறிஞ்சி மருத்துவமனையில், வரும் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதுகு தண்டுவடத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து குறிஞ்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: முதுகு வலி என்பது முதுகில் ஏற்படும் வலியுடன் நின்றுவிடாது. இதை கவனிக்காவிட்டால், சிலருக்கு முதுகு வலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலருக்கு குறுகிய தூரம் நடப்பது, சிறிதுநேரம் அமர்வது கூட கடினமாக இருக்கும். தண்டுவடத்தில் ஏற்படும அதிகப்படியான பாதிப்பால், சிலருக்கு கூன் விழலாம். சிலரால் தன் சொந்த வேலைகளை கூட செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு இயக்கம் முற்றிலும் பாதிப்பட்டு படுத்த படுக்கையாக நேரிடலாம். கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள தண்டுவட எலும்புகள், அதை சுற்றியுள்ள தசைகள், தசை நார்கள் மற்றும் அதன் உள்ளே இருக்கும் நரம்புகளின் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய வலிதான் முதுகுவலி.