கடலூர், ஜூன் 18: கடலூரில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போதிலும் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். மருத்துவமனை சூறையாடப்பட்து. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் கடந்த 11ம் தேதி முதல் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு மருத்துவர்கள் மட்டும் கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் சிகிச்சை தவிர வேறு எந்தபணிகளிலும் மருத்துவர்கள் ஈடுபடவில்லை.