ஏரல், ஜூன் 18: பண்டாரவிளை ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று (18ம் தேதி) துவங்குகிறது. ஏரல் அருகே பண்டாரவிளையில் உள்ள பிரசித்திபெற்ற சுயம்புலிங்க சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று (18ம் தேதி) காலை 7 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து பிரம்மசார்ய பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு நவக்கிரக பூஜை முதலான பல்வேறு பூஜைகளை தொடர்ந்து 11 மணிக்கு வாஸ்து சாந்தி, பல்வேறு ஹோமங்கள் நடைபெறும். மாலை 5 மணிக்கு தீர்த்த ஸங்க்ரஹணத்துக்கு பிறகு முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோயில் திறப்பு விழா, குத்துவிளக்கேற்றல் நடைபெறும். நாளை (19ம் தேதி) காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் 2ம் கால யாகபூஜை நடக்கிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோயில் மண்டபத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளாரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ திறந்துவைக்கிறார். தொடர்ந்து அணையா தீபவிளக்கை ஆஷா சண்முகநாதன் ஏற்றிவைக்கிறார். மடத்தூர் அய்யா அதிசயபதிக்கு சொந்தமான குரு சுவாமி லிங்கம் கன்னிவிநாயகர் கோயிலை திறந்துவைக்கிறார். பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் சுயம்புலிங்க சுவாமி கோயில் முதல் பிரகார கட்டிடத்தை திறந்து வைக்கிறார். சென்னை வேளச்சேரி வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பெருமாள் நாடார் திருக்கோயில் மூலஸ்தான அறையை திறந்து வைக்கிறார்.