திருச்செந்தூர், ஜூன் 18: திருச்செந்தூர் பேரூராட்சி, தோப்பூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.12.50 லட்சத்தை அனிதா ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. ஆனால், அதன்பிறகு இன்று வரை இதற்கான பணியை பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டிய மக்கள், நேற்று காலை 10 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊர்த்தலைவர் நந்தக்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், விசிக ஒன்றியச் செயலாளர் சங்கத்தமிழன், மாவட்ட அமைப்பாளர்கள் தமிழ்ப்பரிதி, விடுதலைச்செழியன், காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் வேல் ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், நகர திமுக செயலாளர் வாள் சுடலை, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கோமதிநாயகம், தனசேகரன் பங்கேற்றனர்.