சோமனூர், ஜூன் 14: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த நூலகம், கடந்த 1998ம் ஆண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையம் எதிரே சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது இந்த நூலகம் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது. அப்போது அதற்கான இழப்பீட்டுத் தொகையையும், கோவை மாவட்ட நூலகத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. அப்போது நூலகம் அமைப்பதற்கு அரசு கட்டிடம் கிடைக்காததால், கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.தற்போது 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நூலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் அமைப்பதற்காக மீண்டும் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் அருகே உள்ள ஐந்து சென்ட் நிலம் நூலகத்திற்காக கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இடம் வழங்கப்பட்டதை அடுத்து, கோவை மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.