கும்பகோணம், ஜூன் 14:கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் போலீஸ் சரக பகுதிக்கென பல்வேறு வசதிகளுடன் கூடிய தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கி 2,400 சதுர அடி பரப்பளவில் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. சூரிய ஒளி மற்றும் மின்சார வசதி ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த போலீஸ் நிலையத்தில் அலுவலக பயன்பாட்டுக்கான 10க்கும் மேற்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். விழாவை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சி, காவல் நிலையத்தில் நடந்தது. எஸ்பி மகேஸ்வரன் பங்கேற்று போலீஸ் நிலைய செயல்பாட்டை துவக்கி வைத்தார். டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், மணிவேல், எஸ்ஐக்கள் மகேந்திரன், கும்பகோணம் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட பிரிவு செயலாளர் பாண்டியன் பங்கேற்றனர்.