தமிழகம், புதுச்சேரி அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு

காரைக்கால், ஜூன் 14: தமிழக, புதுச்சேரி அரசின் விருது பெற்ற பல்வேறு கலைஞர்களுக்கு, காரைக்கால் கலைஞர்கள் மாமன்றம் பாராட்டு விழா நடத்தியது.காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பில், தமிழக, புதுச்சேரி அரசின் விருது பெற்ற பல்வேறு கலைஞர்களுக்கு, தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது பெற்ற ராகவசாமி, பேராசிரியர் சாயபுமரைக்காயர், தமிழக அரசின் உமறுபுலவர் விருது பெற்ற பேராசிரியை நசீமாபானு, புதுச்சேரி கல்வித்துறை சார்பில், நடைபெற்ற நடனப்போட்டியில் விருது பெற்ற சினேகா, தேசிய அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுக்கான விருது பெற்ற மாணவன் சிவபாலன், மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த மாணவன் சுகதேவ், தேசிய அளவிலான தற்றாப்பு போட்டியில் விருது பெற்ற மாணவி புவனேஸ்வரி, தஞ்சை காவேரி அன்னை கலை மன்றம் நடத்திய நாடக போட்டியில் முதல் மற்றும் சிறப்பு விருது பெற்ற ஹாஜாமெய்தீன், சிறந்த ஓவியர் ரஜினிசங்கர், அயல் நாட்டில் சிறந்த பரதத்திற்கான விருது பெற்ற சித்ரா கோபிநாத் என பல்வேறு துறையில் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு, மாமன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். கலைஞர்கள் மாமன்றம் சார்பில் விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மோகன், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆறுமுகம், மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் சோழசிங்கராயர், அம்பேத்கர் சமூக நல அமைப்பாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசினர்.விழா ஏற்பாடுகளை மாமன்றத் துணைத் தலைவர் கவிஞர் தங்கவேலு, இணைச் செயலர் புஷ்பராஜ், பொருளாளர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: