முத்துப்பேட்டை, ஜூன்13 : வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் ஏராளம். இதேபோல் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வரும் சிறுவர்கள், நகரங்களில் உள்ள உணவகங்கள், கடைகள், வீடுகள் என வேலை பார்க்கும் நிலை உள்ளது. குறைந்த சம்பளத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வேலை பார்ப்பதையே நாம் குழந்தை தொழிலாளர் முறை என்கிறோம்.பள்ளிக்கு செல்லும் வயதிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.