சோழவந்தான், ஜூன் 12: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரேட்டம் ஜூன் 25ல் நடக்கிறது. சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் 17 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பூஜை பொருட்களுடன் நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்களின் பக்தி கோஷத்துடன் இரவு 8.30 மணியளவில் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் பூக்குழி, அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.