சேந்தமங்கலம், ஜூன் 12: கொல்லிமலை ஓடையில் சடலமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. மகள் காதல் திருமணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வளப்பூர்நாடு ஊராட்சி சின்னகோவிலூர் கிராமத்தில் வனப்பகுதியில் உள்ள ஓடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அந்தபகுதியில் ஆடு, மாடு மேய்க்கச்சென்ற மலைவாழ் மக்கள், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.