விருத்தாசலம், ஜூன் 12: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பூதாமூர் பகுதியில் திரவுபதியம்மன் கோயில் தெரு, ஈவெரா தெரு, பாரதி தெரு, வள்ளலார் தெரு, காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பூதாமூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து நகராட்சி மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூதாமூரில் உள்ள பகுதி மிகவும் மேடான பகுதி என்பதால், குடிநீர் குழாய்களில் நீரேற்றம் செய்ய முடியாமல் குடிநீர் சரிவர கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பலர் வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்று அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அப்போது 6 வீடுகளில் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அடுத்த வீடுகளில் மின் மோட்டார்களை எடுக்க செல்லும் போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.