கோவில்பட்டி, ஜூன் 12: கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க வலியுறுத்தி மகளிர் சுயஉதவி குழு உறுபினர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஜெயந்தி அறிவுரைப்படி கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குலசேகரபுரம் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் பாபு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.