இலுப்பூர், ஜூன் 4: அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அன்னவாசல் அருகே வயலோகத்தில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைசாசி திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முன் நிகழ்ச்சியாக கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. காப்பு கட்டிய நாள் முதல் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருவீதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் 8ம் திருவிழாவாக பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 9ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.