மாநகராட்சி பகுதியில் 8 நடுநிலைப்பள்ளிகளில் கே.ஜி. வகுப்பு துவக்கம்

கோவை, ஜூன் 4: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாக மழலையர்களுக்கான கே.ஜி. வகுப்புகள் நேற்று துவக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டு, அந்த மையங்களில் மழலையர் வகுப்புகளான கே.ஜி வகுப்புகள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 14 நடுநிலைப்பள்ளிகளில் சங்கனூர், டாடாபாத், கோட்டை, வெட்டர்பன் பேட்டை, ஆர்.எஸ்.புரம், பாப்பநாயக்கன் பாளையம், கணபதி ராமகிருஷ்ணாபுரம், ஒப்பணக்கார வீதியில் உள்ள 8 மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது.  இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 134 மாணவர்களும், யூ.கே.ஜி. வகுப்புகளில் 163 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு நண்பகல் 12 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: