சதுரங்க போட்டிகளில் சர்வதேச அளவில் ரேங்கிங் பெற்ற மேலூர் அரசு பள்ளி மாணவர்கள்

மேலூர், மே 28: சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் மேலூர் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் ரேங்கிங் பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி துவக்கப் பள்ளியை சேர்ந்த மாணவர்களில் சிலர் சதுரங்க போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஓராண்டாக மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில் தொடர்ந்து விளையாடி 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

இதனால் இவர்கள் சர்வதேச அரங்கில் வெளியாகும் பட்டியலிலும் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக அளவில் சதுரங்க போட்டியில் தொடர் வெற்றி பெறுபவர்களை பட்டியலிடும் ‘சர்வதேச சதுரங்க அமைப்பு’(எப்ஐடிஇ) வெளியிட்ட தகவலின்படி அ.செட்டியார்பட்டி பள்ளி மாணவர்களின் 3 பெயர் இடம் பெற்றுள்ளது. இப்பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் எஸ்.தேவ்நாத் சர்வதேச அளவில் ஸ்டெண்டர்ட் என அழைக்கப்படும் போட்டியில் 1092 ரேட்டிங்கும், பிலிட்ஜ் வகை போட்டியில் 1108 ரேட்டிங்கும் பெற்றார்.

இதே வகுப்பை சேர்ந்த எம்.சந்தோஷ் ஸ்க்டெண்டர்ட் பிரிவில் 1057 ரேட்டிங்கும், பிலிட்ஜ் பிரிவில் 1098 ரேட்டிங்கும் பெற்றார். 5ம் வகுப்பு மாணவி சி. கலைச்செல்வி பிலிட்ஜ் வகையான போட்டியில் 1035 ரேட்டிங் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சர்வதேச ரேங்கிங் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, இடைநிலை ஆசிரியரும், பயிற்சியாளருமான செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் சியாமளா, பூமாதேவி மற்றும் பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: