மணமேல்குடி, மே 25: மணமேல்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் மானியத்தில் சொட்டுநீர் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம். வேளாண்மை உதவி இயக்குநர் ஆதிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரியின் நீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. மணமேல்குடி வட்டாரத்தில் 2018 ம் ஆண்டு பெய்த மழை அளவானது 702.1 மிமீ. இதனால் கண்மாய்கள் அனைத்தும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.