க.பரமத்தி, மே25: தேசிய நெடுஞ்சாலை வழியே மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம், காருடையம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, முன்னூர் தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு தென்னிலை தெற்கு, மொஞ்சனூர், கோடந்தூர், ஆகிய ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் சில ஊர்கள் கரூர் கோவை செல்லும் தேசிய நெடுஞ் சாலையையொட்டியே அமைந்துள்ளது. இப்பகுதிகளில் போதிய மழை இல்லாத நிலையில் விவசாயிகள் பலர் கால்நடைகள் வளர்ப்பதையே தொழிலாக செய்து வருகின்றனர். சிலர் இறைச்சிக்காக கால்நடைகளை வளர்த்து செவ்வாய் தோறும் கூடும் வார சந்தையில் விற்பனை செய்கின்றனர். கால்நடைகளை மொத்தமாக தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரங்களில் திரும்ப வீட்டுக்கு கொண்டு வருவதற்கென ஒரு சிலர் கூலி ஆட்கள் வைத்தும் ஒரு சிலர் தானே அந்த பணிகளை செய்து வருகின்றனர்.