திருவாரூர், மே 24: திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் அமோக வெற்றி பெற்றார். திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல் நல குறைவு காரணமாக இறந்ததையடுத்து இந்த தொகுதி காலியாக தொகுதியாக அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் 18ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது.இதில் திமுக சார்பில் வேட்பாளராக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன், அதிமுக சார்பில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், அமமுக சார்பில் வேட்பாளராக மாவட்ட செயலாளர் காமராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வினோதினி, மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக அருண்சிதம்பரம் மற்றும் 10 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 15 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.இந்நிலையில் இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை விட 62 ஆயிரத்து 288 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.