திருவாரூர், மே 23: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடியில் கடந்தாண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 13 பேர் இறந்த முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 13 பேர்களின் உருவப் படங்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்படி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 13 பேர்களின் படங்களுக்கும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.