மயிலாடுதுறை, மே 23: மயிலாடுதுறை மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் ஏஜண்டுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டம் நடத்தினார். அதில் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி மற்றும் டிஆர்ஓ உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம், வழக்கறிஞர் ராமசேயோன், அதிமுக, அமமுக, மநீமை மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஏஜண்டுகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில்,‘ வாக்குப் பதிவு இயந்திரங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலமான கண்காணிப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று (23ம் தேதி) காலை வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அந்த காப்பு அறையானது திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இந்திய தேர்தல் ஆணையம் என்ற ஒரு அப்ளிகேஷன் மூலமாக பொதுமக்களும் வேட்பாளர்களும் இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான உடனுக்குடனான நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இந்த ‘சுவிதா’ அப்ளிகேஷன் மூலமாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை சுற்றுகள் வாரியாக அவர்களுக்கு இந்த ஆப் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.