காரைக்கால், மே 23: காரைக்கால் மாவட்டத்தில் இன்று (மே 23) நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தை, தேர்தல் பார்வையாளர்கள் பிரசன்னா ராமசாமி, பாபுராவ் நாயுடு, கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் பதிவான வாக்குகள், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும், இன்று (23ம் தேதி) எண்ணப்படவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை, புதுச்சேரி தேர்தல் பார்வையாளர்கள் பிரசன்னா ராமசாமி, பாபுராவ் நாயுடு, கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விக்ராந்த் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்றத்தில் பதிவான வாக்குகளை எண்ண, 2 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுங்காடு, திருநள்ளாறு சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரு மையத்திலும், காரைக்கால் தெற்கு, காரைக்கால் வடக்கு, நிரவி-திருமலைராயன்பட்டினம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றொரு மையத்திலும் எண்ணப்படும்.