திருவாரூர், மே 21: நாகை எம்.பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பட்டியலை அளிக்குமாறு தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். நாகை எம்.பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமானது திருவாரூர் அருகே இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் ஆனந்த் பேசியதாவது, நாகை மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி காலை 8 மணி அளவில் துவங்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு என தனித்தனியாக வழி அமைக்கப்பட்டு உள்ளது.