28ம்தேதி முதல் ஜூன் 8 வரை நடக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் தொடர்பான சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, மே21: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல்தொடர்பான முகாம் வரும் 28ம் தேதி முதல் ஜூன்  8ம்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் குறித்து 2 வார முகாம் நடத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வருகிற 28ம் தேதி முதல் 8ம்தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் தொடர்பான 2 வார முகாம் நடைபெற உள்ளது. அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று வாய்வழி உப்பு சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் 12 அரசு மருத்துவமனைகள், 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள், 3 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,799 அங்கன்வாடி மையங்களிலும் நாள்தோறும் உப்பு சர்க்கரை கரைசல் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட உள்ளது.

இம்முகாமின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 224 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இது குறித்து போதிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை இம்முகாமில் தவறாமல் பங்கேற்க செய்து பயன்பெற வேண்டும். என்றார்.  கூட்டத்தில் பொதுசுகாதார துணை இயக்குனர் பரணிதரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: