முத்துப்பேட்டை, மே 17: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(74). ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய ஐந்து மகன், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சுப்பிரமணியன், ராஜேஸ்வரி ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர் வீடு, நல்லது கேட்டது விசேஷங்களுக்கு எங்கு சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.