திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 7வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொது விநியோக திட்டத்தின் அரவைக்காக நெல் மூட்டைகள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவுபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோன்கள் மற்றும் அரவைக்காக நவீன அரிசி ஆலைகள் போன்றவற்றிற்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் தினந்தோறும் நெல் மற்றும் அரிசிகளை அனுப்பும் பணியிலும் இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.