முத்துப்பேட்டை, மே 16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் 12ம் ஆண்டுதேர் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் பட்டுக்கோட்டை பங்குத்தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார் தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்தநிலையில் தேர் பவனி வரும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பட்டுக்கோட்டை உதவி பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் பாடல் திருப்பலியை தொடர்ந்து பலவண்ண வாண வேடிக்கைகளுடன் பேட்டை செபஸ்தியார் ஆலயத்திலிருந்து தேர் ஊர்வலம் புறப்பட்டது. இதில் தெற்குத்தெரு, பேட்டைசாலை, பெரிய கடைத்தெரு, பங்களாவாசல், பழைய பஸ் ஸ்டாண்ட், மன்னார்குடி சாலை பகுதியில் சென்று விட்டு மீண்டும் அதே பகுதி வழியாக பேட்டை சென்று பல முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றது. பின்னர் தேர் ஊர்வலம் நள்ளிரவு செபஸ்தியார் ஆலயம் வந்தடைந்தது. வழியெங்கும் பல்வேறு மதத்தினர் வரவேற்று வழிபாடு நடத்தினர். இதில் பங்குத்தந்தை ஜோசப் செல்வராஜ், உதவி பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், புனித செபஸ்தியார் ஆலயத்தின் தலைவர் காஸ்டா, துணைத்தலைவர் சூசைசைமாணிக்கம், செயலாளர் அமல்தாஸ், பொருளாளர் அமலதாஸ் துணைச் செயலாளர் தாவீது ராஜா மற்றும் ஜெயராஜ், சகாயராஜ், டேவிட்ராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.