தாராபுரம், மே 15: தாராபுரம் அருகே வேங்கிபாளையம் கிராம மக்கள் காவிரி கூட்டு குடிநீர் கேட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மரவாபாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கு அதிகமான கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி சார்ந்த மரவாபாளையம் சூரியன் நல்லூர், குள்ளாய்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்குழாய் குடிநீரில் துவர்ப்பு மற்றும் உப்புச்சுவை உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல் வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதனை குடிநீராக பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. எனவே தங்களுக்கு அமராவதி அல்லது காவிரி கூட்டு குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் பவுத்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மரவாபாளையம் கிராம மக்கள் தாங்கள் உபயோகிக்கும் புளோரைடு அமில தண்ணீரை பாட்டில்களில் நிரப்பியும், காலி குடங்களுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டு விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மக்களை சமாதனம் செய்தார்.