ஈரோடு, மே 10: ஈரோடு மக்களவை தொகுதி திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மக்களவை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 1,678 வாக்குச்சாவடியில் கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், காங்கயம் சட்டமன்ற தொகுதி வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி எண் 248ல் மாதிரி வாக்குபதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்குபதிவு நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கதிரவன் தேர்தல் ஆணையத்துக்கு மறு வாக்கு பதிவு நடத்த பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து வரும் 19ம் தேதி மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து மறு வாக்குபதிவு நடத்துவதற்கான பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.