காரைக்குடி, மே 3: காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் துவங்காததை கண்டித்து தொழில் வணிகக்கழகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. பணி முடிந்த பகுதிகளில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. மேலும் பணி முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கு என டென்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு ஒர்க் ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலை காரணம் காட்டி பணிகளை நிறுத்தி வைத்திருந்தனர். தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் பணிகள் துவங்கவில்லை. இதனை கண்டித்து தொழில் வணிகக்கழகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.