சிங்கம்புணரியில் சேவுக பெருமாள் பூப்பல்லகில் பவனி

சிங்கம்புணரி, மே 23: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா தேவியார் உடனான சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெற்ற இத்திருவிழாவில் 5ம் நாள் திருக்கல்யாணம், 6ம் நாள் களுவன் திருவிழாவும், 9ம் நாள் தேராட்ட திருவிழாவும் நடைபெற்றது. தினமும் இரவில் பூதம், ஐந்து தலை நாகம், சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 10ம் நாள் திருவிழாவான பூப்பல்லக்கு திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சேவுக பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர் பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூப்பல்லக்கு வைக்கப்பட்டு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நான்கு ரத வீதிகள் வழியாக பூப்பல்லக்கு ஊர்வலமாக வலம் வந்து காலை 6 மணிக்கு கோயிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரியில் சேவுக பெருமாள் பூப்பல்லகில் பவனி appeared first on Dinakaran.

Related Stories: