முத்துப்பேட்டை, மே 1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியில் உள்ளதால் அரசின் அனைத்து அடிப்படை வசதிகளும் பின்தங்கிய நிலையில் தான் பல ஆண்டுகளாக உள்ளது. இருந்தும் அவசிய தேவைகளை இப்பகுதி மக்கள் இதுநாள் வரை போராடிதான் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம்தேதி தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவம் இப்பகுதியை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியது. தற்போது வரை சகஜ நிலைக்கு வரவில்லை என்றாலும் புயலால் சீர்குலைந்து கிடப்பதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய முன்வரவில்லை. இதில் குறிப்பாக அம்பேத்கர் நகர் பகுதி சாலையோரம் ஆங்காங்கே கஜாவில் வீழ்ந்த மரங்கள் இன்றும் அகற்றாமல் கிடக்கிறது. இதில் காலனிக்கு செல்லும் சிமெண்ட் சாலையோரம் இருந்த பனை மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை நிமிர்த்தவோ அகற்றவோ ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த பயனுமில்லை. அதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதளவில் உள்ளது.