செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு

பாடாலூர், மே 1: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குபேர ஹோம சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமானின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும், குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகின்றது.

அதன்படி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குபேரன் சன்னதியின் முன்பு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு பின்னர் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பால், தயிர், குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு ஹோமமும் வழிபாடும் நடைபெற்றது. குபேர ஹோம சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும் செல்வாக்கு உயரும் என்பது நம்பிக்கை. இதனால் குபேர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட்,நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Related Stories: