ஆம்பூர், மே1: ஆம்பூர் அருகே பாய், தலையணையில் மட்டுமே படுத்துறங்கும் ஆச்சரியமூட்டும் குணாதிசயங்கள் கொண்ட அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.கால்நடைகளில் தெய்வமாக போற்றப்படும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பசுவின் கன்று ஒன்று மனித குணாதிசயங்களோடு மனிதர்களோடு பழகி வருகிறது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கறவை மாடு ஒன்று வாங்கி வந்து வளர்த்து வந்தார்.அந்த பசு சமீபத்தில் ஆண் கன்று ஒன்றை ஈன்றது. பிறந்த சில நாட்களிலேயே அது சராசரி பசுக்கன்று போல் இல்லாமல் மனிதர்களோடு பழக ஆரம்பித்தது. மாட்டு தொழுவத்தில் தாய் பசுவோடு இருக்காமல் வீட்டிற்குள் புகுந்து தலையணை, பாய் போடப்பட்ட இடத்திற்கு சென்று படுத்து உறங்குவது, தண்ணீர் அருந்துவது ஆகிய செயல்கள் செய்து வருகிறது.