வாழைத்தோட்டத்தில் யானைகள் அட்டகாசம் கே.வி.குப்பம் அருகே பரபரப்பு

கே.வி.குப்பம், மார்ச் 12: கே.வி.குப்பம் அருகே விவசாய நிலத்தில் உள்ள வாழைகளை சேதப்படுத்திய யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசி, மாளியாப்பட்டு, பனமடங்கி, பள்ளத்தூர், காளாம்பட்டு உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாளியாப்பட்டு சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து நெற்பயிர்கள், வாழை தோட்டத்தை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த காட்பாடி வனச்சரக அலுவலர் கந்தசாமி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து அதனை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளால் சேதமான பயிர்களை வருவாய்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். தொடர்ந்து யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், யானைகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: