புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு

தஞ்சை, ஏப். 26: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் புயல் சின்னம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:

இந்திய பெருங்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்களும் செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களின்கீழ் பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். மாவட்ட நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் கள அலுவலர்கள் அனைவரும் விடுமுறை நாட்களிலும் தங்களது தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும். வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அதில் பணியாளர்களை முழு நேரமும் இருக்குமாறு சுழற்சி முறை பணியில் பணியாற்ற வேண்டும்.மாவட்டத்தில் உள்ள 14 புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்களை புயல் நேரத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் மின் விநியோகம், குடிநீர் விநியோகத்தை சீர் செய்து ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களிலும் அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்து குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புயலால் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக கருவிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை அந்தந்த வட்டங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

புயலால் சாய்ந்து விழும் மின் கம்பங்களை சீர் செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல் எச்சரிக்கை அறிவிக்கப்படும் நேரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.எஸ்பி மகேஸ்வரன், கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் பங்கேற்றனர்.

Related Stories: