போடி, ஏப்.25: போடியில் காவல்நிலையம் அருகில் உள்ள நகராட்சி வளாகத்தில் குடிமகன்கள் கும்மாளம் அடித்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். போடி காமராஜ்சாலையில் நகர் காவல்நிலையம் உள்ளது. இதன் அருகில் நகராட்சி வளாகம் உள்ளது. இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக கறிக்கடை, கருவாட்டு கடை, காய்கறி கடைகள், வாழைஇலை கடைகள் என வாடகைக்கு விடப்பட்டு இயங்கி கொண்டிருந்தன. இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த வளாகத்தை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு ரூ.40 லட்சம் செலவில் 30 கடைகள் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டது. தொடர்ந்து கடைகளை வாடகைக்கு விட நகராட்சியிலிருந்து ஏலம் விடப்பட்டது. அதிக வாடகை என்பதால் குறைந்தவர்களே கடைகளை ஏலம் எடுத்தனர். ஆனால் கடைகள் திறந்தும் சரிவர வியாபாரம் இல்லை. இதனால் நகராட்சிக்கு அதிக வாடகை கட்ட முடியாமல் வியாபாரிகள் அடைத்துவிட்டனர். மற்ற கடைகளையும் யாரும் சரியாக ஏலம் எடுக்க முன்வராததால் கடைகள் முழுவதும் அடைத்து கிடக்கின்றன. வளாகம் காட்சிபொருளாக இருக்கிறது.