திருமங்கலம், ஏப்.23: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் போதுமான அளவு மேற்கூரை, மின்விசிறி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மதுரை கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் உள்ள முக்கிய ஸ்டேஷன்களில் ஒன்றாகும். மதுரை செங்கோட்டை, மதுரை புனலூர், பாலக்காடு திருச்செந்தூர், நாகர்கோயில் மங்களூர், தூத்துக்குடி மங்களூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்களும், சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. தற்போது கோடைவிடுமுறை காலம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மேற்கூரை போதுமான அளவு இல்லை. இதனால் ஸ்டேஷனில் பலவேறு பகுதிகளில் பயணிகள் வெட்ட வெளியில் கடும் வெயிலில் நின்று ரயில் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர பிளாஸ்ட்பாரங்களில் இருக்கையில் அமர்ந்துள்ள பயணிகளுக்கு காற்றோட்ட வசதிக்காக மின்விசிறிகள் எதுவும் இல்லை. ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து கழிப்பறைகளும் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கின்றன. ஒரேயொரு மினரல் வார்டர் தொட்டி மட்டுமே அமைந்துள்ளது. அதுதவிர வேறு தண்ணீர் வசதிக்கான பைப்லைன்கள் இல்லை. பிளாட்பாரங்களில் எலித்தொல்லை அதிகளவில் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றன.