காடையாம்பட்டி அருகே கள்ளக்காதலி கொலையில் 19 ஆண்டுக்கு பின் முதியவர் கைது

காடையாம்பட்டி, ஏப்.21: காடையாம்பட்டி அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவானவரை போலீசார் 19 ஆண்டுக்கு பின்பு கைது செய்துள்ளனர். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.காடையாம்பட்டி அருகே உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(61). கடந்த 19 ஆண்டுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த ராணியை, கடந்த 2000ம் ஆண்டு நல்லதம்பி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, நல்லதம்பி மீது வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நல்லதம்பி, உடல்நலக்குறைவால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீசார் நல்லதம்பியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கு குற்றவாளியை 19 ஆண்டுக்கு பின்பு கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: