திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் மழை வேண்டி குளத்தில் இறங்கி வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.21: தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு வெப்ப நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கோடை பயிர்கள் கருகும் நிலையும் உள்ளது. இதற்கு தீர்வு மழை மட்டுமே. முற்காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மழைக்கு உரிய தெய்வங்களான இந்திரன், வருணன் ஆகியோரை வழிபட ஜபங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவார்கள்.

இதனால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இந்த முறையில் நாட்டில் மழை பெய்ய வேண்டி திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் வேங்கடேசபெருமாள் மற்றும் கைலாசநாதர் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் வரகூர் கிராம மக்கள் வேத விற்பன்னர்களை கொண்டு கோயில் குளத்தில் இறங்கி வேதத்தில் கூறப்பட்டுள்ள 760 பஞ்சாதிகளை சொல்லி “பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம்” மற்றும் கரையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், இந்திரன் உள்ளிட்ட எட்டு திசை தெய்வங்கள் வருணன் (மழைக்கடவுள்) ஆகியோருக்கு விசேஷ ஹோமங்கள் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: