பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக.,பாமகவினர் 5 பேர் இடி தாக்கியதில் படுகாயம்

மேச்சேரி, ஏப்.19: மேச்சேரியில் இடி தாக்கியதில் பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக, பாமக பிரமுகர்கள் 5 பேர் உடல்கருகி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது. மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தைப்பேட்டை அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையொட்டி, அருகில் உள்ள அதிமுக கூட்டணி கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மாலை 4 மணி முதல் அப்பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த சமயத்தில் கட்சி அலுவலகத்தில் இடி தாக்கியது. இதில், பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த எர்ரப்பட்ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50), குமார்(40), சூரன்காட்டு வளவு லோகநாதன்(33), பெரியசாமி(31) ரெட்டியூர் பிரபு(36) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முகம் மற்றும் தலை, நெஞ்சு பகுதியில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இடி தாக்கியதில் பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக, பாமக பிரமுகர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: