ஈரோடு, ஏப். 17: கீழ்பவானி வாய்க்காலில் மே 10ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு கூறியிருப்பதாவது:தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போது மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எள், தேங்காய், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்து பயிர்களும், கரும்பு போன்ற நீண்ட கால பயிர்களும் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. தினக்கூலியும் பல மடங்கு உயர்ந்து விட்டது. மஞ்சள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும், எள் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரையும் கூலி உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மஞ்சள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 12 குவின்டால் மட்டுமே கிடைக்கிறது. விலையும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.