நாமக்கல், ஏப்.16: குடிநீர் பிரச்னையை தீர்க்காமல், அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அதிக ஆர்வம் காட்டுவதாக நாமக்கல்லில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் தெரிவித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேலுவை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அக்கறை காட்டாத அதிமுக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும். அதுவே, மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் மக்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட்டுக்கு நீங்கள் வாக்களிக்கும் போது, அது சரியாக பதிவாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.