சேத்தியாத்தோப்பு, ஏப். 10:சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வடதலைக்குளம் ஊராட்சி. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ ஆலோசனைகள், பெண்களுக்கு கர்ப்ப கால ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள், குழந்தைகள் வளர்ப்பு முறை பற்றிய விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. தடுப்பூசி மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை சுற்றி முட்புதர்களும், செடி கொடிகளும் மண்டிக் கிடக்கிறது. மேலும் விஷ ஜந்துக்களும் வந்து செல்வதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களான உளுத்தூர், அம்பாள்புரம், பிரசன்ன ராமாபுரம், தென் தலைக்குளம், மருதூர் ஆகிய 5க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துணை சுகாதார நிலையம் பல கிராமங்களின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.