நாகை, ஏப்.5: பனங்குடி காவிரி படுகை சுத்திகரிப்பு ஆலையை மூடக்கூடாது என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.நாகையை அடுத்த நாகூர் முட்டம் பனங்குடியில் உள்ள காவேரி படுகை சுத்திகரிப்பு ஆலை பாதுகாப்பு சங்கம், சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் சி.பி.சி.எல். காவிரி படுகை சுத்திகரிப்பாலையை மூட கூடாது, ஆலை விரிவாக்கம் என்று ஏமாற்றி ஆலையின் இயக்கத்தை நிறுத்த கூடாது, நல்ல நிலையில் இருக்கும் ஆலையை மூடி தொழிலாளர் வயிற்றில் அடிக்க கூடாது, நரிமணத்தில் உற்பத்தியாகும் கட்சா எண்ணையை கப்பல் மூலம் கடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் கண்ணன், பாலசுப்பரமணியன், முத்துராஜா, சாமிநாதன், தங்கமணி, சகாதேவன் ஆகியோர் தலைமையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.