திருப்புத்தூர், ஏப்.4: திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என, கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேசினார். சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்புத்தூர் அருகே நெடுமறம் பகுதியில் நேற்று காலை பிரச்சார பயணத்தைத் தொடங்கினார். பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிசெய்கின்ற எடப்பாடி மற்றும் மோடி தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. இந்த இரண்டு கூட்டணியில் எந்த கூட்டணி கட்சி, மக்களுக்கு சொன்னதை செய்துள்ளது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டணிதான் கடந்த ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவில் அனைத்துவிதமான மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றால், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒரு நல்லாட்சி வரவேண்டும்’’ என்றார்.