தூத்துக்குடி, ஏப். 3: தூத்துக்குடியில் நேற்று நடந்த அமித்ஷா கூட்டத்துக்கு வந்தவர்கள், நிழலுக்காக மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது பாம்பு ஒன்று அப்பகுதியில் இருந்து வெளியேறியதால் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.தூத்துக்குடியில் நேற்று மதியம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து பேசினர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், முதியவர்கள் உள்பட அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் குவிந்தனர். பகல் 11 மணிக்கே வெளியூரில் இருந்து கூட்டணி கட்சியினர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். மேடையை சுற்றி போடப்பட்ட பந்தலில் குறைந்தளவே இருக்கைகள் போடப்பட்டதால் பெரும்பாலான தொண்டர்கள் பந்தலுக்கு வெளியே கொளுத்தும் வெயிலில் தவித்தனர். மதியம் 2 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு மணிக்கு வர வேண்டிய பாஜ தலைவர் அமித்ஷா 2 மணிக்குதான் வந்தார். அவர் 3.20 மணிக்கு பேச்சை முடித்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்தனர். பெண்கள் பலர் திரும்பி சென்றனர். சிலர் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.